Friday, August 27, 2021

அரச அலுவலர் வழக்கு (prosecution) தொடுத்தல் வினாவிடைகள் 2

Public servant prosecution



14) திணைக்களத் தலைவர் ஒருவர் அரசாங்கத்தின் சார்பில் வழக்கு ஒன்றினை தொடுக்க உத்தேசிக்குமிடத்து அவர் யாருக்கு விண்ணப்பம் செய்தல் வேண்டும்?

சட்டமா அதிபருக்கு Attorney General

15) அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டியுள்ளமை காரணமாகச் சட்டமா அதிபருக்கு அறிவிக்க நேரமில்லாதவிடத்து, மாவட்ட செயலாளர் (District Secretary) யாரின் சேவையை பெற முடியும்?

அரசாங்கப் பணிகளிலீடுபடுகின்ற தனது மாவட்டத்திலுள்ள வழக்கறிஞரொருவரின் (Lawyer) சேவையை பெற முடியும். ஆயினும் அவ்வாறு செய்தற்கு கீழ்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.

அ) அவ்வழக்கறிஞரின் கட்டணத்தை செலுத்துவதற்குத் தேவையான நிதி காணப்படல் வேண்டும்.

ஆ) எந்த வழக்கு அல்லது விடயம் சம்பந்தமாக அவ்வழக்கறிஞரின் சேவையை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவ்வழக்கு அல்லது விடயம் அற்பமான ஒன்றாக இராது அது அரசாங்கத்தோடு நேரடியானதும் போதியளவானதுமான தொடர்பு கொண்ட ஒன்றாக அமைந்திருத்தல் வேண்டும்.

இ) அது, சட்டமா அதிபரை ஒரு திறத்தவராகக் கொள்ளாத ஒன்றாகவிருத்தல் வேண்டும்.

ஈ) தனக்கு வருவானமொன்றைத் தருகின்ற அரச சார்புள்ள நிறுவனம் ஒன்றினால் அந்நிறுவனத்தின் செலவில் நிரூபிக்கப்பட வேண்டிய அல்லது வாதிடப்பட வேண்டிய வழக்கொன்றாகவோ அல்லது விடயமொன்றாகவோ இருத்தலாகாது.

16) குற்றவியல் வழக்கொன்றைத் தொடுப்பதற்கு முன்னர், அரசாங்கத்தின் அனுமதி வேண்டப்படுமிடத்து அவ்வங்கீகாரம் பெறுதற் பொருட்டான கோரிக்கை யாரூடாக சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்?

சட்டமா அதிபரூடாக

17) சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றைத் தொடுப்பதற்காக அல்லது ஏதேனும் வழக்கொன்று சார்பாக உத்தியோகத்தர் ஒருவரை விடுவித்துக் கொள்வதற்காகச் சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்படும்போது அனுப்பப்பட வேண்டிய ஆவணங்களை குறிப்பிடுக.

அ) வழக்குக்குரிய விடயங்கள் தொடர்பிலான விரிவான கூற்றொன்று.

ஆ) வழக்கிற்கு அடிப்படையாக உள்ள சாட்சியங்களை வழங்கவுள்ள சாட்சிகளின் பெயர்ப் பட்டியல் (List of Witnesses)

இ) வழக்கிற்குரிய எல்லா ஆவணங்களினதும் பட்டியலொன்றும் ஒவ்வோர் ஆவணத்தினதும் பிரதிகள் இரண்டு வீதமும்; சாட்சிகளின் கூற்றுக்கள். (Documents List and Statements of Witnesses)

ஈ) மருத்துவ உத்தியோகத்தர்கள் (Medical Officers), அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர்கள் (Government Chemical analysts), ஐயத்திற்குரிய ஆவணங்கள் தொடர்பான அரசாங்கப் பரீட்சகர், விரல் அடையாளப் பதிவாளர் (Registrar of Finger Print) போன்ற விசேட நிபுணத்துவ சாட்சிகளின் பெயர் பட்டியலொன்று, அவர்களின் அறிக்கைகளின் பிரதிகளுடன்.

18) ஏதேனுமொரு திணைக்களத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கொன்றில் நீதவான் ஒருவர் எதிராளி குற்றமற்றவர் என வழங்கியுள்ள தீர்ப்பு பிழையானதென அத்திணைக்களம் கருதுமிடத்து, திணைக்களத் தலைவர் ஒருவர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை குறிப்பிடுக.

அ) திணைக்களத் தலைவர் இது தொடர்பாக உடனடியாகச் சட்டமா அதிபருக்கு அறிவித்தல் வேண்டும்.

ஆ) எனினும் சட்டமா அதிபர் பொருத்தமானதெனக் கருதுமிடத்து, அத்தகைய தீர்ப்பொன்றுக்கு எதிராக மேன்முறையீடொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் (Appeal Court) சமர்ப்பிக்கலாம்.

இ) வழக்கு விசாரணை தொடர்பான சான்றுறுதிப்படுத்தப்பட்ட பிரதியொன்றைப் பெற்றிருந்தால் அதனையும் சட்டமா அதிபருக்கு அனுப்புதல் வேண்டும்.

19) அரசாங்கத்திற்கு எதிரான வழக்கொன்று தொடுக்கப்பட்டுள்ளதென்ற அறிவித்தலொன்று திணைக்களத் தலைவரொருவருக்கு கையளிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பமொன்றில், திணைக்களத்தலைவர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை குறிப்பிடுக.

1) அவர் அதுபற்றி உடனடியாக சட்டமா அதிபருக்கு அறிவித்தல் வேண்டும்.

2) குறித்த விடயம் பற்றிய அனைத்து விபரங்களுமடங்கிய வெளிப்படுத்துகையொன்றையும் அதனோடு தொடர்புடைய எழுத்துக் கோப்பின் பக்கங்களுக்குரிய தொடர்புகளையும் விளக்கிக் காட்டி நிற்கின்ற குறித்த திணைக்களத்தின் எழுத்துக் கோப்பினையும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

3) திணைக்களத் தலைவர் வழக்கு நடவடிக்கையின் எதிர்வாதத்துக்கு வேண்டப்படுகின்ற சகல தகவல்களையும் சட்டமா அதிபருக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.

20) திணைக்களத் தலைவர் ஒருவர், அவரின் பதவி நிலையில் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்ற ஒரு செயல் தொடர்பிலான சிவில் வழக்கொன்றுக்கான (Civil Case) அறிவித்தலொன்றைப் பெறுவாராயின், அவர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை குறிப்பிடுக.

அ) அவர் தாமதமின்றி சட்டமா அதிபரின் ஆலோசனையை வினவுதல் வேண்டும்.

ஆ) அவ்வாறு செய்கையில் குறித்த அறிவித்தலையும், உரிய திணைக்களக் கோப்பினையும், வழக்கு தொடுக்கப்பட்டுள்ளமை பற்றி கிடைக்கப்பெற்றுள்ள அறிவித்தலையும் அனுப்புதல் வேண்டும்.

இ) அவ்வழக்கின் எதிர்வாதத்தைத் தான் மேற்கொள்ள வேண்டுமென சட்டமா அதிபர் அபிப்பிராயப்படுவாரெனின், அவ் வழக்கின் எதிர்வாதியான அவ்வரசாங்க உத்தியோகத்தருக்குப் பதிலாகத் தன்னைப் பெயர் குறிக்குமாறு சட்டமா அதிபர் மன்றுக்கு விண்ணப்பிப்பார்.

ஈ) அவ்வாறின்றேல் சூழ்நிலைக்கேற்ப அவ்வழக்குத் தொடர்பாகத் தோன்றி எதிர்வாதத்தை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பார்.

21) திணைக்களத் தலைவரல்லாத ஓர் உத்தியோகத்தர், அவரின் பதவி நிலையில் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்ற, ஒருசெயல் தொடர்பிலான சிவில் வழக்கொன்றுக்காக அறிவித்தலொன்றைப் பெறுவாராயின், அவர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை குறிப்பிடுக.

அ) அவர் உடனடியாக தனது திணைக்களத் தலைவருக்கு அது பற்றி தெரிவித்தல் வேண்டும்.

ஆ) அப்போது திணைக்களத் தலைவர், பொருத்தமான வகையில் சட்டமா அதிபரிடமிருந்து ஆலோசனை (Getting Advice from Attorney General) பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

இ) அவ்வுத்தியோகத்தர் சார்பில் வழக்குக்கான எதிர்வாதத்தைத் தான் மேற்கொள்ள வேண்டுமென சட்டமா அதிபர் அபிப்பிராயப்படுவாரெனில், அவ்வழக்கின் எதிர்த்தரப்புக் கட்சியாக தன்னைப் பெயர் குறிக்குமாறு மன்றுக்கு விண்ணப்பிப்பதற்கோ அல்லது சூழ்நிலைக்கேற்ப அவ்வழக்கு தொடர்பாகத் தோன்றி எதிர் வாதத்தை முன்வைப்பதற்கோ நடவடிக்கை எடுப்பார்.

ஈ) மேற்குறித்த எச்சந்தர்ப்பத்திலாயினும் வழக்கின் எதிர்வாதத்தைத் தான் மேற்கொள்ள வேண்டியதில்லையெனச் சட்டமா அதிபர் அபிப்பிராயப்படுவாரெனில், குறித்த ஆவணங்களை தனது அபிப்பிராயத்துக்குரிய காரணங்களுடன், நீதி அமைச்சருக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

உத்தியோகத்தர் ஒருவர் தனது பதவி நிலையில் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்ற செயல் தொடர்பாக அவருக்கு எதிராகக் குற்றவியல் வழக்கொன்று (Criminal Case) தொடுக்கப்படுமிடத்து அவர் தனது எதிர் வாதத்திற்கு தனது சட்டவாதிகளுடாக ஒழுங்குகளை மேற்கொள்ளல் வேண்டும். வழக்கு முடிவடைந்ததன் பின்னர், ஏற்பட்ட செலவு மீளளிப்புக்காக XI ஆம் அத்தியாயத்தின் கீழ் கோரிக்கையொன்றை முன்வைக்கலாம்.

22) அரசாங்க உத்தியோகத்தரொருவரினால் தனிப்பட்ட ரீதியில் வழக்கொன்றைத் தொடுத்தல் தொடர்பாக தாபன விதிக்கோவை அத்தியாயம் XXXIII இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை குறிப்பிடுக.

a) அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் தனது கடமைகளை ஆற்றுகையில் எழுந்த விடயமொன்று தொடர்பாக செயலாளரின் முன்னங்கீகாரமின்றி தனது தனிப்பட்ட நிலையில் வழக்குகளைத் தொடுக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது.

b) அதற்காக செயலாளரின் அங்கீகாரம் கோரவேண்டியது திணைக்களத் தலைவரினூடாகவேயாகும்.

c) ஐயமொன்று நிலவுகின்ற சந்தர்ப்பங்களில் செயலாளர் சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.